Breaking News

ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே குரூப் 1 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் TNPSC அறிவிப்பு

     2020 ஆண்டு முதல் ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே குரூப் 1 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் ஒரு வருடத்திற்குள் அதற்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) டிசம்பர் 9ம் தேதியன்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

      ஆண்டுதோறும் சுமார் 40-க்கும் மேற்பட்ட அரசுப்பணிக்கான தேர்வுகள் நடைபெறும் நிலையில் இதில் 30 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்பது வழக்கம். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறிப்பிட்ட சில தேர்வுகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படக் கூடிய உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டு, அதன்படி முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கும், அறிவிக்கை வெளியான நாளிலிருந்து ஓராண்டுக்குள்ளாகத் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படவுள்ளது.

     அதன்படி, வரும் 2020 ஜனவரி முதல் வாரத்தில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதனிலைத் தேர்வு நடத்தப்படும். அதற்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும். குரூப் 1 முதன்மைத் தேர்வு ஜூலை மாதம் நடத்தப்பட்டு, நவம்பர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இறுதியாக குரூப் 1 நேர்காணல் அடுத்த ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் டிசம்பர் இறுதியில் வெளியிடப்படும்.

     குரூப் 1 தேர்வைப் போலவே, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கும் முறையான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments